சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து காபி மேக்கர் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
துபாயில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த விக்னேஸ்வரன் ராஜா (35) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்த போது, காப்பி மேக்கர் இயந்திரம் ஒன்று இருந்தது.
அந்த காபி தயாரிக்கும் இயந்திரம் வழக்கத்தைவிட எடை அதிகமாக இருந்ததால், அதனை திறந்து சோதனை செய்தனர். அதில், ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.