கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்துக் கொலையா? - போலீஸ் விசாரணை

By ந.முருகவேல் 


கடலூர்: கடலூர் மாவட்டம் காராமணி குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருந்தாளுநரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணி குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஓய்வு பெற்ற மருந்தாளுநர். இவர் தனது மனைவி கமலேஸ்வரி, பேரன் ரிஷபந்த், மகன் ரமேஷ்குமார், சுதன் குமார் ஆகியோர் வசித்து வந்தனர். இதில் ரமேஷ்குமார் உடல்நிலை குறைவால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு மகன் சுதன் குமார் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மகன் ரிஷபந்த் தனது தாய் தந்தையரோடு வசித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 15) காலை சுரேஷ்குமாரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அங்கு வந்து போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் கமலேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒவ்வொரு அறையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE