தஞ்சாவூர் | சிறார்களை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியவருக்கு ஆயுள் தண்டனை

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியதற்காக சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை(ஜூலை 9) ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர் பூண்டி தோப்பைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம் முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்த இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு 2023-ம் ஆண்டில் தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, சிபிஐ அலுவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விக்டர் ஜேம்ஸ் ராஜா 5 -18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளைத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை செய்து வந்ததும், சிறுவர்- சிறுமிகளைப் பாலியல் தொல்லைக்கு ஈடுபடுத்தியதும், அவற்றை வீடியோவாக பதிவுசெய்து இணையதளத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, சிபிஐ அலுவலர்கள் 2023, மார்ச் 7-ம் தேதி வழக்குப் பதிந்து, 16-ம் தேதி விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 6.54 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE