போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் கொலை: பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது @ திருக்கோவிலூர் 

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் ஐயப்பன் நகரில் ‘லோட்டஸ் பவுண்டேஷன்’ என்ற போதை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

மதுப் பழக்கத்துக்கு உள்ளான, ஜா.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்(46) என்பவர் கடந்த 5-ம் தேதி இந்த மையத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லை என்று கூறி, திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை நேற்று முன்தினம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராஜசேகர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவரது உடலை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். தகவலறிந்து வந்த ராஜசேகர் மனைவி ராஜாமணி, தனது கணவர் ராஜசேகரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ராஜசேகரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனையில் ராஜசேகரின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருக்கோவிலூர் டிஎஸ்பி (பொறுப்பு) பூபாலன், காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மனநலமையத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, போலீஸாரின் முன்னிலையில், வருவாய்த் துறையினர் மனநல மருத்துவமனைக்கு நேற்று ‘சீல்’ வைத்தனர்.

மேலும், இந்த வழக்கை நேற்று மாலை கொலை வழக்காக மாற்றி, மனநல மையத்தின் உரிமையாளரான, பாஜக முன்னாள் மாவட்டசெயலாளர் காமராஜ் (54), கவுல் பாஷா(44), ஜமால்(25), ஆனந்தராஜ்(35), திருப்பாலபந்தலைச் சேர்ந்த எத்திராஜ்(43), மணம்பூண்டியைச் சேர்ந்த பிரவீன்குமார்(26), ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

23 பேர் மீட்பு... இதற்கிடையே, இந்த போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்த 23 பேரை மீட்ட சுகாதாரத் துறையினர், அவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவர்களால் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், நோயாளிகளின் உறவினர்கள் வந்தவுடன், அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE