தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரி சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குடியுரிமை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் வெளிநாடுசெல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு செயல்படுகிறது. இதில், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மாற்றுப் பணியாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை விஜிலன்ஸ் பிரிவு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை பிரிவில் பணியாற்றும் சரவணன் என்பவர் மீது புகார்கள் வந்ததால், அவரை ஓராண்டாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில், அவர் போலி பாஸ்போர்ட்டில் செல்வதற்கும், தங்க கடத்தலுக்கு உதவியாக இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. அதனால், அவரை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE