ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் | சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்; போலீஸ் விசாரணை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச்செல்லும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடிப்படையாக வைத்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு (வெள்ளிகிழமை) படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 10 தனிப் படைகளை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிச்செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை அடிப்படையாக வைத்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்தது என்ன? - பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு: இது ஒரு புறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங் வீடு உள்பட சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கண்டனம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE