ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழந்த கணவர் - சின்னமனூரில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மணிமாலா (36). மாற்றுத் திறனாளியான இவர் சின்னமனூர் அரசு மருத்துவ மனையில் தோல் நோய் சிகிச்சைப் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் உள்ளூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு தருண் (11) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மணிகண்டன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கடனை சில மாதங்களுக்கு முன்பு அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மணிமாலா பகவதியம்மன் கோயில் அருகே தனியாக கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் மீண்டும் ரூ.25 லட்சம் கடன் இருப்பதாக மனைவி மணிமாலாவிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு (வியாழன்) இருவருக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை வாக்குவாதம் செய்த தம்பதி தனித்தனி அறையில் தூங்கச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் மணிகண்டன் எழுந்து மனைவி மணிமாலா அறையை திறக்க முயன்றபோது, கதவு உட்புரம் பூட்டி இருந்துள்ளது. பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, மணிமாலா சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடனே கதவை உடைத்த மணிகண்டன் மனைவி மணிமாலாவை கீழே இறக்கி சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மணிமாலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவறிந்து மருத்துவமனைக்கு விரைந்த சின்னமனூர் காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மணிமாலாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே, மணிமாலா இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை மாரியப்பன் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE