திருப்பூர் | கார் - இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: 3 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பொங்கலூர் அருகே, காரும் இருசக்கர வாகனங்களும் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இவரது மகள் மகிழினி (3) உள்பட 6 பேர், புத்தரச்சலில் இருந்து வாவிபாளையம் நோக்கி காரில் நேற்று (ஞாயிற்றுகிழமை) மாலை சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கோவை மாவட்டம் சூலூர் போகம்பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து (48) ஒரு இருசக்கர வாகனத்திலும், அவரது உறவினர்களான புளியமரத்துப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (38), இடும்பன் (50) ஆகிய 2 பேர் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் எதிர்திசையில் வந்து கொண்டிருந்தனர்.

கழுவேரிபாளையம் அருகே வந்தபோது, காரும் இருசக்கர வாகனங்களும் மோதின. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பேச்சிமுத்து மற்றும காரில் வந்துகொண்டிருந்த அருண்குமாரின் மகள் மகிழினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காருக்குள் இருந்த 5 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இவர்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த பேச்சிமுத்து மற்றும் மகிழினி ஆகியோரின் உடல்களை மீட்ட நாயக்கன்பாளையம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE