சென்னை விமான நிலையத்தில் ரூ.3.91 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: துபாயிலிருந்து பெரிய அளவில் தங்கம் சென்னைக்கு கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சுற்றுலா பயணிகளாக துபாய் சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 6 தங்க செயின்கள், 7 தங்கக் கட்டிகள் உள்ளிட்டவற்றை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

மொத்தம் ரூ.3.91 கோடி மதிப்புள்ள 6 கிலோ 128 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பேரும் பணத்துக்காக தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE