ரூ.3 கோடி சந்தன கட்டை கடத்தல்: கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது @ சேலம்

By செய்திப்பிரிவு

சேலம்: கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக ரூ.3 கோடி மதிப்பிலான சந்தனக் கட்டைகளை கடத்த முயன்றதாக, கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் வழியாக சந்தன மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையிலான வனத் துறையினர் கடந்த3-ம் தேதி மகுடஞ்சாவடி அருகேவாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த கன்டெய்னர் லாரியில் சோதனையிட்டதில், ரூ.3கோடி மதிப்பிலான 1.50 டன் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த வனத் துறையினர், லாரி ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த முகமது சுகைல் (34), வாகன உதவியாளர் முகமது பசிலு ரகுமான் (26) ஆகியோரைக் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 4 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி, ஈரோடு மாவட்டம் பவானியில் பதுங்கியிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகியோரை வனத் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், சந்தனக் கட்டைகளை கேரளாவில் இருந்து கர்நாடகா வழியாக வெளிநாடுகளுக்கு பலமுறை கடத்திச் சென்றதும், கர்நாடகாவில் கெடுபிடி அதிகமானதால் தமிழகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்ததும் தெரியவந்தது.

சந்தனக் கட்டைகளை கடலூர் துறைமுகம் மூலமாக கப்பலில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. சந்தனக் கட்டைகளை எங்கிருந்து வாங்கினர், அவற்றை வாங்கும் வியாபாரிகள் குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE