ஆவடி | இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை : திரைப்பட தயாரிப்பாளர் கைது

By செய்திப்பிரிவு

ஆவடி: சென்னை, கொளத்தூர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் முகம்மது அலி (29). திரைப்பட தயாரிப்பாளரான இவர், திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கத்தில் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில், பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார்.

இவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:

முகம்மது அலி தனக்கு திருமணமானதை மறைத்து, என்னைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் அவர், குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

நான் கர்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை எனக்கு கொடுத்து கருவைக் கலைத்தார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால், கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததோடு, நெருக்கமாக இருந்த வீடியோ பதிவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என மிரட்டி, என்னிடம் ரூ. 5 லட்சம் வரை பணத்தைப் பறித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நேற்று முன்தினம் 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகம்மது அலியை கைது செய்தனர். பிறகு, அவரைஅம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE