சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம்: உறவினர்கள் குற்றச்சாட்டு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னை மதுரவாயலில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரை அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (36). கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரை அவரது குடும்பத்தினர் சென்னை வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு சாலையில் உள்ள தனியார் குடி போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஒன்பதாம் தேதி சேர்த்தனர்.

முதற்கட்ட சிகிச்சைக்காக ரூ.10,500 கொடுக்கப்பட்டது. மாதம் தோறும் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென குடிபோதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பணமும் கொடுக்கப்பட்டது. மேலும், மாதத்தில் ஒருமுறை மட்டுமே வசந்தகுமாரை அவரது குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்து செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று வசந்தகுமாரின் தம்பி சுரேஷ்குமாருக்கு குடிபோதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள் போன் செய்து, “உங்களது அண்ணணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். வந்து பாருங்கள்” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

அவர்கள் கூறியபடி சுரேஷ்குமார் மருத்துவமனை சென்று பார்த்தபோது அண்ணன் வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரை அடித்து கொலை செய்து விட்டனர் என்று கூறி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “எனது அண்ணனின் உடலில் அடித்த தழும்புகள் மற்றும் காயங்கள் இருந்தது. வாய் பகுதியில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. எனவே எனது அண்ணன் உடல் நலக்குறைவால் உயிரிழக்கவில்லை. அவரை குடிபோதை மறுவாழ்வு மையத்தின் பணியாளர்கள் அடித்து கொலை செய்து விட்டனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளர்.

இந்த விவகாரம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE