ராமேசுவரம்: இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ராமேசுவரம் அருகேயுள்ள வேதாளையில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நிற்காமல் சென்ற ஒரு காரை போலீஸார் துரத்திச் சென்றனர். ஆனால், வழியிலேயே காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
சோதனையில், காரில் 5 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். மாத்திரைகளையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.