போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீஸார் டெல்லியில் கடந்த பிப்ரவரி 24-ம்தேதி கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கும் மார்ச் 9 அன்று கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஜாபர்சாதிக்கை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவத்தனையில் ஜாபர் சாதிக் ஈடுபட்டிருப்பதாக, அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 9-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, சென்னை சாஸ்திரி நகரில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகம், பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய 3 பேரின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல் என்று சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர, மதுரை, திருச்சி என ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஜாபர் சாதிக் மனைவி அமீனாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில், ஜாபர் சாதிக் மனைவி நேற்று மதியம்அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE