முன்னாள் சபாநாயகரின் சகோதரருக்கான ஜாமீன் ரத்து: அரசு வேலை மோசடி வழக்கில் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய் நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக, மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய் நல்லதம்பி மீது முகமது மொஹிதீன் என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விஜய் நல்லதம்பி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்தாண்டு கைதான விஜய் நல்லதம்பி, ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை திருப்பி தருவதாகவும், அதன்பிறகு இரண்டு மாதங்களில் மொத்தப் பணத்தையும் திருப்பி கொடுப்பதாகவும் விஜய் நல்லதம்பி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது.

ஆனால், உறுதியளித்தபடி நல்லதம்பி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி முகமது மொஹிதீன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, ஜாமீன் பெறும்போது அளிக்கப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி விஜய் நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE