இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.03 கோடி மதிப்பிலான 13.9 கிலோ தங்கம் பறிமுதல்

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ. 10.03 கோடி மதிப்புள்ள 13.952 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் அருகே வாகனத்தில் சென்ற ஒருவரை பிடித்து நடத்திய விசாரணையில் அவரிடம் 5892.15 கிராம் கடத்தல் தங்கம் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மற்றொரு அதிகாரிகள் குழு சிவகங்கை அருகில் நடத்திய வாகன சோதனையில், இரண்டு சரக்கு வாகனத்தில் சென்றவர்களிடம் இருந்து, அங்கு நின்ற 2 பேரிடம் தங்கத்தை கொடுத்தபோது அவர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 8060.5 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இரண்டு கடத்தல் சம்பங்களிலும், ரூ.10.03 கோடி மதிப்புள்ள 13.952 கிலோ வெளிநாட்டு தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இலங்கையிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட கடல் வழியாக தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE