சென்னை | அகமதாபாத் செல்லும் விமானத்தில் போதையில் தகராறு செய்த பயணி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தில் போதையில் தகராறு செய்த பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் காந்தி (35) என்பவர் சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். சொந்த ஊர் செல்வதற்காக, 5 வயது மகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவர், அகமதாபாத் செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தார்.

மது போதையில் இருந்த அவர் சக பயணிகளிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணிப்பெண்களிடம் பயணிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, விமானத்தை இயக்குவதை நிறுத்திய விமானிகள், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் வந்து அவரையும், அவரது மகளையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி, விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, அவரை எச்சரித்த போலீஸார் மற்றொரு விமானத்தில் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE