சென்னை | வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது சொகுசு காரை ஏற்றிய வடமாநில பெண் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கூகுள் மேப்பை நம்பி வாகனத்தை ஓட்டிய வடமாநில பெண், குறுகலான பகுதி என்பதை அறியாமல் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது காரை ஏற்றினார். இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அசோக்நகர் 10-வதுதெருவில் வசித்து வருபவர் சரிதா. இவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவில் வீட்டின்வாசல் பகுதியில் உள்ள சாலையோரம் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த உறவினர்கள் மீது அடுத்தடுத்து ஏறி இறங்கியது.

இதில், 7 பேர் காயம் அடைந்து வலியால் துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கியவர்கள், அப்பகுதி மக்கள் கண் விழித்து வெளியே ஓடி வந்து பார்த்தனர்.

உடனடியாக போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரும் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவர்களில் சரிதா உட்பட 2 பெண்களுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முன்னதாக விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டிய பெண் அங்கேயே நின்றுள்ளார். அவரை மடக்கிபிடித்த அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பெண் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வைஷாலி (41) என்பதும், சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்த அவர் கூகுள் மேப் காட்டிய பாதையில் தான் சொகுசு காரை ஓட்டி வந்ததாகவும், ஆனால் அது குறுகலான முட்டு சந்து என்பது தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வைஷாலியை கைது செய்த போலீஸார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE