வருமான வரித் துறை அதிகாரி என்று கூறி சிவகாசி பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு: திமுக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

சிவகாசி: சிவகாசியில் வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து, பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்தாக திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லையா மகன் சவுந்தர்ராஜ் (55). இவர் பட்டாசு விற்பனை தொழில் செய்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை சவுந்தரர்ராஜ் வீட்டில் இருந்தபோது, காரில் இவரது வீட்டுக்கு வந்த இருவர்,தங்களை வருமான வரித் துறைஅதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

மேலும், சவுந்தர்ராஜ் முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாகக் கூறியஅவர்கள், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்ராஜையும், அவரது தம்பியையும் தாக்கி உள்ளனர். இதையடுத்து, சவுந்தர்ராஜ் தனதுமகன் மூலம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், மீதி ரூ.40 லட்சத்தை வழங்குமாறு சவுந்தர்ராஜை செல்போனில் தொடர்புகொண்டு, தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 8-ம்தேதி சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சவுந்தர்ராஜ் புகார் அளித்தார். இது சம்பந்தமாக விசாரிக்க 3 தனிப்படைகள் அமைத்து டிஎஸ்பி சுப்பையா உத்தரவிட்டார்.

இதையடுத்து, வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து, பணம்பறித்த திமுக சாத்தூர் கிழக்குஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், சுப்பிரமணி, கார் ஓட்டுநர் மகேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸார்கைது செய்தனர்.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திமுக ஒன்றியப் பிரதிநிதி கருப்பசாமியையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE