சென்னை | தகராறை தட்டி கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: ரவுடிகள் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: தகராறை தட்டிக் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, ஆர்.ஏ.புரம், கெனால் பேங்க் ரோடு பகுதியில் வசிப்பவர் கபாலி (64). அதே பகுதியில் சிறிய வகை ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 8-ம் தேதி மாலை, ஓட்டலில் இருந்தபோது, ஓட்டல் எதிரே 4 பேர் கையில் பீர் பாட்டிலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கபாலி, அவர்களிடம் சென்று தகராறை தட்டிக் கேட்டுள்ளார்.

இதில், அவருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 4 பேரும் கத்தி, அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் கபாலியை தாக்கினர். மேலும் இதைத் தடுக்க வந்த அவரது மகன் வசந்த் என்பவரையும் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயம் அடைந்த கபாலி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பியதாக துரைப்பாக்கம் எழில் நகர் பிரவீன் (30), மயிலாப்பூர் கெனல் பாங்க் சாலை சரத் (23), அதே பகுதி ராமகிருஷ்ணபுரம் ராகுல் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி ஒருவரை தனிப்படை அமைத்து போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரவீன் மீது 3 குற்ற வழக்குகளும், சரத் மீது 3 குற்ற வழக்குகளும், ராகுல் மீது 7 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேலும் சரத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் மயிலாப்பூர் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE