ஆன்லைனில் பணத்தை இழந்த பெண்ணின் ரூ.15 லட்சத்தை மீட்டுத் தந்த கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸ்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: குறைந்த விலைக்கு கிரிப்டோ கரன்சி கிடைப்பதாக நம்பி ரூ.20 லட்சம் இழந்த பெண்ணுக்கு, ரூ.15 லட்சத்தை கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸார் மீட்டு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சரண்யா. இவர் செல்போனில் டெலிகிராம் குரூப்பில் வந்த குறுந்தகவலை பார்த்து துபாயை சேர்ந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குறைந்த விலைக்கு தன்னிடம் யுஎஸ்டிடி கிரிப்டோ கரன்சி உள்ளதாகவும், அதன் மூலம் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய சரண்யா, அவர் கூறிய 2 வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு கார்த்திக்கை பல முறை சரண்யா தொடர்பு கொண்டு யுஎஸ்டிடி கிரிப்டோ கரன்சியை அனுப்புமாறு கேட்டார். ஆனால் அவர் கிரிப்டோ கரன்சியை அனுப்பவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரண்யா, இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி சங்கு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சரண்யா அனுப்பிய பணம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெனி என்பவரின் வங்கி கணக்குக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் ரெனியை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ரெனியும், கார்த்திக்கிடம் இதே போல ரூ.20 லட்சம் கொடுத்து ஏமாந்ததும், சரண்யாவிடம் ரெனியின் வங்கி கணக்குகளை கார்த்திக் கொடுத்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரெனியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் மீட்கப்பட்டது. அந்த தொகையை, எஸ்பி தங்கதுரை, சரண்யாவிடம் ஒப்படைத்தார். மீதம் உள்ள 5 லட்சம் தொகை ரெனியின் வங்கி கணக்கில முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் அதை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், துபாயை சேர்ந்த கார்த்திக்கின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். அவர் இதேபோல பலரிடம் கிரிப்டோ கரன்சி உள்ளதாக ஆசை வார்த்தைகள் கூறி, பணம் பெற்று அவர் ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சங்கு கூறுகையில், “பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE