வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி: 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

சிவகாசி: சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பட்டாசு விற்பனை ஏஜென்டிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த திமுக பிரமுகர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லையா மகன் சவுந்தர்ராஜ்(55). இவர் பட்டாசு விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த திங்கள் கிழமை வீட்டில் இருந்த போது காலை 11 மணி அளவில் காரில் இவரது வீட்டிற்கு வந்த இருவர் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி உள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் கேட்டு உள்ளனர்.

சவுந்தர்ராஜ் தனது உறவினர் மூலம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் மீதி பணத்தை வழங்குமாறு சவுந்தர்ராஜை செல்போனில் தொடர்பு கொண்ட தொடர்ந்து மிரட்டி உள்ளனர். இதுகுறித்த புதன்கிழமை காலை சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சவுந்தர்ராஜ் புகார் அளித்தார்.

போலி அதிகாரிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து டி.எஸ்.பி சுப்பையா உத்தரவிட்டார். போலி அதிகாரிகளாக நடித்த சாத்தூர் கிழக்கு திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், சுப்பிரமணி, கார் ஓட்டுநர் மகேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்த போது, தாயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் திட்டத்தின் படி, சவுந்தர்ராஜிடம் அதிகாரிகள் போல் மாணவர்களை நடித்து பணம் பறித்ததாக தெரிவித்தனர்.

சவுந்தர்ராஜின் பள்ளி தோழரும் திமுக ஒன்றிய பிரதிநிதியுமான கருப்பசாமி, சுரேஷ், சுப்பிரமணி, மகேஷ் ஆகியோரை கைது செய்த நகர் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சவுந்தர்ராஜின் பள்ளி தோழரான தாயில்பட்டி அருகே கோட்டையூரை சேர்ந்த கருப்பசாமி கடந்த ஓராண்டுக்கு முன்னரே சவுந்தர்ராஜிடம் உன் மீது வருமான வரித்துறை சோதனை நடக்க உள்ளது. என்னிடம் ரூ.18 லட்சம் கொடுத்தால் வருமான வரித்துறை விசாரணை இல்லாமல் பார்த்து கொள்கிறேன் எனக்கூறி இருக்கிறார். அதற்கு அவர் மறுக்கவே போலி அதிகாரிகளை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE