அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் ஈஸ்வரன்(24), பலராமன் மகன் புவனேஷ் கிருஷ்ணசாமி(19), தேவா மகன் செல்வா(17), கரந்தட்டாங்குடி விசு மகன் சண்முகம்(23) ஆகிய 4 பேரும் பெரம்பலூரில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே மாலை 5 மணியளவில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லி லாரியின் பின்புறம் கார் வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த 4 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த திருமானூர் போலீஸார் அங்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு, தஞ்சாவூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE