உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது

By செய்திப்பிரிவு

பிஜ்னோர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தனது கணவரை கட்டி வைத்து, அவர் சித்ரவதை செய்த குற்றத்துக்காக அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த கொடுஞ்செயல் குறித்து வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட அவரது கணவர் மனன் ஸைதி. அதனடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் மெஹர் ஜஹான், தனது கணவரின் கை மற்றும் கால்களை துணியால் கட்டியுள்ளார். தொடர்ந்து அவர் மீது அமர்ந்து கழுத்தை நெரிக்கிறார். அதோடு சிகரெட்டை கொண்டு உடல் முழுவதும் சூடு வைக்கிறார். இதற்கு முன்பும் மனன் ஸைதி காவல் நிலையத்தில் தனது மனைவி இப்படி செய்வதாக புகார் அளித்துள்ளார். ஆனால், அப்போது போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்து முறை தனது புகாரோடு வீடியோ ஆதாரத்தையும் மனன் ஸைதி சேர்த்து வழங்க மெஹர் ஜஹான் கையும் களவுமாக சிக்கியுள்ளார். தனக்கு போதை கலந்த பாலை கொடுத்து இப்படி செய்வதாகவும் மனன் ஸைதி அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சித்திரவதை செய்தது உள்ளிட்ட குற்றத்துக்காக மெஹர் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு அவரை கைதும் செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என காவல் துறை எஸ்.பி. தரம்பால் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE