சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போர்ட் மூலம் ஹமீது முஸ்தபா (47) என்பவர் சென்னையிலிருந்து மலேசியா தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சென்னை விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சீட்டு, கந்து வட்டி மற்றும் போலி பாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்படி, அப்பிரிவு உதவி ஆய்வாளர் எமர்சன் வித்தாலிஸ் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக இந்த மோசடி வழக்கில் ஹமீது முஸ்தபா (47), ஹாஜா ஷெரிப், வள்ளல் இப்ராஹிம் ஷா ஆகிய3 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடிக்கு மூளையாக, ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம் செய்து அதன் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்க உதவியதாக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (44) என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்சியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸார் அங்கு சென்றுநேற்று கைது செய்தனர். இவர் இதேபோல், சுமார் 50 பேருக்கு ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றி மோசடியான முறையில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.