சென்னை | உணவக உரிமையாளரை விரட்டி தாக்கிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேர் கைது: காருக்கு வழி விட சொன்னதால் ஆத்திரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை விரட்டிச் சென்று தாக்கியதாக ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நேற்று முன்தினம் மாலை, தனது உறவுக்கார பெண்ணுடன் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனது துரித உணவகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டினப்பாக்கம் பகுதியில் முன்னால் சென்ற கார் வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வழிவிடச் சொல்லும் வகையில் மணிவண்ணன் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னால் சென்ற காரில் இருந்த 3 பேர், காரில் இருந்து இறங்கி வந்து மணிவண்ணனை கடுமையாக தாக்கினர்.

இந்நிலையில், போக்குவரத்து காவலர் ஒருவர் சண்டையை விலக்கி விட முயன்றபோது, அந்த கும்பலில் ஒருவர்,தான் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி என்று கூறி மிரட்டி அவரிடமும் தகராறு செய்துள்ளனர். பின்னர் அந்தக் கும்பல் காரில் தப்பியது. தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த மணிவண்ணன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தப்பிய கும்பல் குறித்து அவர்கள் பயணித்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தாக்குதலில் ஈடுபட்டது திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, அவரது தந்தை சுடலையாண்டி, ஆயுதப்படை காவலர் கோபி என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கார்த்திக் ராஜா பாஜக பிரமுகர் என கூறப்பட்டது. ஆனால்,போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE