சென்னை | ஹோட்டலில் தகராறு செய்த காவலர், நண்பர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஹோட்டலில் தகராறு செய்த காவலர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சேது (31). சென்னை பெருநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றும் இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பாதுகாவலராக உள்ளார்.

இந்நிலையில், சேது, தனது நண்பரும், மென்பொறியாளருமான நொளம்பூர் பிரவீன் பிரபுவுடன் (28) அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டார்.

அப்போது இருவரும் அதிக சப்தத்துடன் பேசுவதாக, மற்றொரு டேபிளில் இருந்தவர்கள் ஹோட்டல் மேலாளரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, ஹோட்டல் மேலாளர், சேது, பிரவீன் ஆகியோரை வேறு டேபிளில் அமர்ந்து, உணவு உண்ணுமாறு கூறியுள்ளார்.

அப்போது இரு தரப்புக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல் ஊழியர்கள், சேது, பிரவீனைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சேது புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஹோட்டல் ஊழியர்கள் பிஹாரைச் சேர்ந்த பீரேந்தர்(23), டிங்கு அலிசா (29),தினேஷ் (26), சிவ்ஜி குமார் (26) ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், ஹோட்டல் நிர்வாகம் தரப்பில், அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவலர் சேது, அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE