மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டபோது கீழே விழுந்தவர்கள் மீது டிராக்டர் மோதியதில், 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் பச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது அலி மகன் முகமது சஹின்(19), சுரேஷ் மகன் ஹரிஹரன்(20), திருஞானம் மகன் ஆகாஷ்(20). இவர்கள் 3 பேரும் நேற்று காலை ஒரே இருசக்கர வாகனத்தில் நாகையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் சென்றபோது, தரங்கம்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர்(48) என்பவர் இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் உள்ள சாலையில் இருந்து, பிரதான சாலைக்கு திரும்பினார். அப்போது 2 இருசக்கர வாகனங்களும் மோதிக் கொண்டதில், அவற்றில் சென்ற 4 பேரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
அப்போது, எதிரில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர், கீழே விழுந்துகிடந்த சஹின், ஹரிஹரன், ஆகாஷ்ஆகிய 3 பேர் மீது ஏறியது. இதில் மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
» ஏற்காடு, தருமபுரி, சூளகிரியில் கோடை மழை
» ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ஸ்ரீதரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக பொறையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.