பாமக கோவை மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்: தனியார் செயலி நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

கோவை: பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ‘மைவி3 ஆட்ஸ்’ நிறுவன நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்‘மைவி2 ஆட்ஸ்’ என்ற தனியார்செயலி நிறுவனம், பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி,மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப். 27-ம் தேதி பீளமேடு கே.ஆர்.புரத்தில் வசிக்கும் அசோக் ஸ்ரீநிதிக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்தார்.

அதில், மைவி3 ஆட்ஸ் நிறுவனஇயக்குநர் சக்தி ஆனந்தன் மற்றும் விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, சக்தி ஆனந்தன், விஜயராகவன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE