சென்னை | பெண் காவல் உயர் அதிகாரிபோல் மிமிக்ரி செய்து பெண் காவலர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் உயர் அதிகாரிபோல் மிமிக்ரி செய்து, ஆயுதப்படை பெண் காவலரிடம் பாலியல்அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் பிரிவில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு கடந்த 24-ம் தேதி போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய அவரது உயர் அதிகாரி ஒருவர், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தனி பாதுகாப்பு அதிகாரியாக (பிஎஸ்ஓ) செல்ல விருப்பம் உள்ளதா? என்று கேட்டதற்கு சம்பந்தப்பட்ட பெண் காவலர் விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அந்த அதிகாரியே உன்னைத் தொடர்பு கொள்வார் எனக் கூறி அந்த போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், சம்பந்தப்பட்ட பெண்காவலருக்கு ஒரு எண்ணிலிருந்து மிஸ்டுகால் வந்தது.

இதையடுத்து, ஏற்கெனவே தெரிவித்த உயர் பெண் போலீஸ் அதிகாரிதான் தன்னை தொடர்பு கொண்டுள்ளார் என நினைத்து அந்த எண்ணுக்கு திரும்ப அழைத்துள்ளார். அந்த அழைப்பில் பேசிய பெண் அதிகாரி பெண் காவலரின் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்களைக் கேட்டுள்ளார்.

பின்னர், பெண் அதிகாரி அந்த பெண் காவலரின் குரல் மற்றும் உடல் அங்கங்களைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்துள்ளார். மேலும், ஒருஆண் நபரை உங்கள் வீட்டுக்குஅனுப்புகிறேன். அனுசரணையாக நடந்து கொண்டால் காவல் துறையில் எஸ்ஐ பணி கிடைக்க உதவுவதாகவும், புதிய வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி பேசியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவலர், பேசுவது பெண் காவல்உயர் அதிகாரிபோல் இல்லை என்ற முடிவுக்கு வந்து அழைப்பைத் துண்டித்தார்.மேலும், தனது பணிப் பொறுப்பு தலைமைக்காவலர் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். அதன்படி, சென்னைமத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம்போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், பெண் காவலரிடம் உயர் பெண் அதிகாரிபோல் பல குரலில் (மிமிக்ரி) பேசிதொடர்பு கொண்டது திருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெரியசாமி (33) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். கைதான பெரியசாமி இதேபோல் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதே குற்றச்சாட்டில் இவர் மீது திருப்பூர்,தருமபுரி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் கைதும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE