ஆவடி: சென்னை, கொளத்தூர் - சிவாநந்தா நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தனியார் வங்கியின் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு கொளத்தூரை சேர்ந்த நில தரகரான பிரகாஷ்(40) அறிமுகமாகியுள்ளார். புழல்பகுதியை சேர்ந்த லோகநாதன் (61)-க்கு கள்ளிக்குப்பம் நேதாஜி நகரில் 2,450 சதுரடி மனை உள்ளது என்று கூறி, அவரை ஹரிபிரசாத்துக்குஅறிமுகம் செய்து வைத்துள்ளார்.
போலியாக பத்திர பதிவு: இதைத் தொடர்ந்து, ரூ.31 லட்சம் பெற்றுக் கொண்டு, அந்த மனையில், 1,200 சதுரடியை ஹரிபிரசாத்திடம் லோகநாதன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். பிறகு ஹரிபிரசாத் தான் வாங்கிய மனையில் வீடு கட்டுவதற்காக, மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளார். இந்நிலையில், லோகநாதன் போலி ஆவணம் மூலம் ஹரிபிரசாத்துக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து ஏமாற்றியது, சார் பதிவாளர் அலுவலகம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, ஆவடி காவல்ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவில் ஹரிபிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் - ஆவண நம் பிக்கை மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் வள்ளி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையின் அடிப் படையில், போலி ஆவணம் மூலம் 1,200 சதுரடி மனைக்கு பத்திர பதிவு செய்து ஏமாற்றியது தொடர்பாக, தலைமறைவாக இருந்த லோகநாதன், நில தரகர் பிரகாஷ் ஆகிய இருவரையும் நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.