மீஞ்சூரில் இளைஞர் கொலை: 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

பொன்னேரி: மீஞ்சூரில் இளைஞரை கொலை செய்து தலையை தனியாகவும், உடலை தனியாகவும் வைத்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருப்பாலைவனத்தைச் சேர்ந்தவர் அஸ்வின்(24). இவர் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பெண் கொடுமை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை அஸ்வினை ஒரு கும்பல் கொலை செய்து தலையை சோழவரம், பெருங்காவூர் இடுகாட்டில் வைத்துவிட்டு உடலை போர்வையால் போர்த்தி மீஞ்சூர்- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வைத்துவிட்டு தப்பியோடியது.

இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், அஸ்வின் கொலை தொடர்பாக நேற்று முன் தினம் இரவு, திருப்பாலைவனம் அருகே உள்ள வழுதிகைமேடுவை சேர்ந்த சரித்திரபதிவேடு ரவுடியான அஜீத்தை (21) கைது செய்தனர்.

அஜீத்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: அஜீத் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அஜீத்தின் உறவினர் பெண்ணை, அஸ்வின் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொருபெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால், அஜீத்துக்கும், அஸ்வினுக்கும் இடையை கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அந்த கருத்து வேறுபாடு காரணமாக அஜீத், தன் நண்பர்களுடன் சேர்ந்து அஸ்வினை கொலை செய்து தலையையும், உடலையும் வேறு வேறு இடங்களில் வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

அயனம்பாக்கம், பெருங்காவூர், மீஞ்சூர் பகுதிகளை சேர்ந்த ஜெயக்குமார் (22), மோகன் (24), கார்த்திக்(26), தேவராஜ்(29), மனோ(27) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE