சென்னை | பல் மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிஹார் தொழிலாளி கைது

By செய்திப்பிரிவு

சென்னை: பல் மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிஹார் தொழிலாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் உள்ள பல் மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவர் சென்னை பூக்கடை, முத்துச்சாமி மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஆண் நபர் ஒருவர் தவறான சைகை காட்டினார். மேலும், அந்த மாணவியிடம் சென்று பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.

அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து மருத்துவ கல்லூரி விடுதி காவலாளி ராஜசேகர் என்பவரிடம் தெரிவித்தார். அவர் இந்த விவகாரம் குறித்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து அதன் அடிப்படையில், பல்மருத்துவ மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி முகமது நிஷார் அன்சாரி (42) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE