கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நேரத்தில் மதுரையில் இளைஞர் கொலை

By செய்திப்பிரிவு

மதுரை: முன்பகை காரணமாக, மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோணை ( 29 ). இவரது நண்பர் வைகை வடகரை பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவரது மனைவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக, கார்த்திக் மற்றும் சதீஸுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி நேற்று கள்ளழகர் ஆற்றில் இறங்கு வதற்கு முன் அதிகாலை 2.30 மணியளவில், ஆழ்வார்புரம் பகுதியிலுள்ள இளநீர் கடை அருகே சோணையும், கார்த்திக்கும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு சதீஸ் வந்துள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சதீஸ் கத்தியால் குத்தியதில் சோணை உயிரிழந்தார். காயமடைந்த கார்த்திக் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதிச்சியம் போலீஸார், சதீஸ் மற்றும் கார்த்திக் மனைவி மதுமதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, சதீஸை கைது செய்தனர். முன்பகையால் இக்கொலை சம்பவம் நடந்தாலும், சித்திரைத் திருவிழா நேரத்தில் நடந்ததால், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE