திண்டுக்கல் | இரு சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மூவர் கைது

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆண் நண்பர்களை கட்டிப்போட்டு விட்டு அவர்களுடன் வந்த சகோதரிகள் இருவரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தப்பி ஓடிய இளைஞரை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19,17 வயதுள்ள சகோதரிகள். இதில் 19 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

சகோதரிகள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது . இருவரும் தங்களது ஆண் நண்பர்களுடன் இடையகோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு கடந்த மார்ச் 30 ஆம் தேதி சென்றுள்ளனர்.

மீண்டும் வீடு திரும்ப சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26) முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22) ஆகிய 3 பேரும் அவர்களிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் எனக் கேட்டுள்ளனர். ஆண் நண்பர்களுடன் வந்ததாகக் கூறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்ன குமார் (25) என்பவருக்கு போன் செய்து, ‘இருவர் சிக்கியுள்ளனர் உடனே புறப்பட்டு வரவும்’ எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து ஆண் நண்பர்கள் மற்றும் சகோதரிகளை கத்திமுனையில் மிரட்டி இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதிக்கு ச்சென்றுள்ளனர்.

அங்கு வந்தவுடன் ஆண் நண்பர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர். 4 வாலிபர்களும் சேர்ந்து சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார் தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர். பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை. கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE