சென்னை | சிமென்ட் சிலாப்பை தலையில்போட்டு தொழிலாளி கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: பேருந்து நிலையத்தில் தூங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வேலவேந்தன் (36). தொழிலாளியான இவர் குடும்பத்தினரைப் பிரிந்து மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தலையில் சிமென்ட் சிலாப்பால் தாக்கப்பட்டு ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மாதவரம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் வேலவேந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த சிவசங்கர்(46) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட வேலவேந்தன் வழக்கம்போல மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் இரவில் தூங்கச் சென்றார். தன்னுடைய இடத்தில் சிவசங்கர் படுத்து தூங்கியதைக் கண்டு கோபம் அடைந்த வேலவேந்தன், நான் தூங்கும் இடத்தில் நீ எப்படி தூங்கலாம்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கவும் செய்துள்ளார். இதையடுத்து, சிவசங்கர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் வேலவேந்தன் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சிவசங்கர், சிமென்ட் சிலாப்பை வேலவேந்தன் தலையில் போட்டுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த வேலவேந்தன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE