தூத்துக்குடி: அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாங்கித் தருவதாக தமிழகம் முழுவதும் 1,315 பேரிடம் ரூ.36 கோடி மோசடி செய்த தொண்டு நிறுவன இயக்குநரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ளமுப்பிலிவெட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி(33). இவரிடம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பாலகுமரேசன்(46) மற்றும் சிலர், தங்களின் தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாகவும், லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடு செய்து தருவதாகவும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதனை நம்பி சண்முகலட்சுமி ரூ.5 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.
ஆனால், ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. மோசடி குறித்துதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனிடம் சண்முகலட்சுமி புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தொண்டுநிறுவன இயக்குநர் பாலகுமரேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
“பாலகுமரேசன் தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைத்திருக்கிறார். வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். 1,315 பேரிடம் ரூ.36.13 கோடி மோசடி செய்துள்ளார்” என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.