‘மைவி3 ஆட்ஸ்’ செயலி மோசடி வழக்கு - பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

கோவை: விளம்பரம் பார்த்தால் வருமானம் என்ற திட்டத்தை செயல்படுத்திய ‘மைவி3 ஆட்ஸ்’ செயலி மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மைவி3 ஆட்ஸ்’ எனப்படும் தனியார் நிறுவனம், செல்போன் செயலி மூலம் பணம் முதலீடு செய்வது, விளம்பரங்களை பார்ப்பது, அது தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்றவற்றின் மூலம் வருமானம் ஈட்டலாம் என அறிவித்தது. மேலும், அந்நிறுவனம் மூலம் மூலிகை மருந்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. இதை நம்பிய ஆயிரக் கணக்கான மக்கள், ‘மைவி3 ஆட்ஸ்’ செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர்.

இந்நிலையில், விதிகளை மீறி முதலீட்டு தொகையை பெற்றது தொடர்பாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்திஆனந்தன் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்துக்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் கூடினர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர். கடந்த மாதம் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்களை ரேஸ் கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.

சக்தி ஆனந்தனுக்கு மூலிகை மருந்துகளை தயாரித்து வழங்கிய மதுரையைச் சேர்ந்த விஜயராகவன் என்பவரிடம் போலீஸார் விசாரித்த போது, அவர் போலி சான்றிதழ் வைத்துக் கொண்டு மருந்துகளை தயாரித்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து, விஜயராகவனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சக்தி ஆனந்தன் மீதான வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாநகர குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE