பரோட்டா சாப்பிட்டபோது மூச்சுத் திணறி தொழிலாளி உயிரிழப்பு - ஆவடி அருகே பரிதாபம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பாலவேடு கிராமம், கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு ( 43 ). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வேலு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வழியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சாப்பிடச் சென்றார். அங்கு பரோட்டா வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் வேலுவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு, ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வேலு உயிரிழந்தார். தகவல் அறிந்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE