சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து: பாஜக பெண் நிர்வாகி கைது @ திருச்சி

By ஜி.செல்லமுத்து

திருச்சி: சமூக வலைதளங்களில் திமுக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகரை திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஏ.கே.அருண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சவுதாமணி, பள்ளிச் சிறுமிகள் மது குடிப்பது போன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, திராவிட மாடல் ஆட்சியில் மதுப்புழக்கம், போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாகவும், அரசு மீது அவதூறு பரப்பும் வகையிலும் பதிவிட்ட சவுதாமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், சவுதாமணி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504, 505, 153, தகவல் தொழில்நுட்பம் சட்டம் பிரிவு 66இ, சிறார் நீதி சட்டம் பிரிவு 74, 77 ஆகிய பிரிவுகளில் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னையில் இருந்த சவுதாமணியை மாவட்ட தனிப்படை இன்று கைது செய்து திருச்சி அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சவுதாமணி ஜாமீனில் வெளிவந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE