மதுரை: ஓடும் ரயிலில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னை தம்பதிக்கு உதவியதாக யேசுதாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 3 நாளுக்கு முன்பு ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப்பொருள் கடத்தியதாக மதுரை ரயில் நிலையத்தில் பிள்ளமன் பிரகாஷ் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் மதுரை பிரிவு அதிகாரிகள் (டிஆர்ஐ) பிடித்தனர். அவரது இரு பேக்குகளில் இருந்து 30 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
7 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னையிலுள்ள அவருடைய வீட்டில் 6 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்த போதைப்பொருளை அவரது மனைவி மோனிஷா ஷீலா அருகிலுள்ள குப்பை தொட்டியில் வீசியிருப்பது தெரிந்து வந்தது. பிறகு அதை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து பிரகாஷின் மனைவி மோனிஷா ஷீலா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சென்னையைச் சேர்ந்த யேசுதாஸ் ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் பிடித்தனர். இருவரையும் அதிகாரிகள் ( DRI) மதுரைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
» “தமிழக வளர்ச்சி நிதியை கொள்ளை அடிக்க விடமாட்டேன்!” - பிரதமர் மோடி ‘உத்தரவாத’ பேச்சு @ சென்னை
» “தண்ணீருக்கு மட்டும் மாதம் ரூ.4,000 செலவு” - ஓசூரில் குடிநீர் பிரச்சினையால் மக்கள் தவிப்பு
இவ்விசாரணையில், மோனிஷா ஷீலா தனியார் பள்ளி ஒன்றில் பணி புரிந்ததாகவும், கணவரின் போதைப் பொருள் கடத்தலுக்கு மோனிஷா மற்றும் யேசுதாஸ் (40) ஆகியோரும் உதவி இருப்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மோனிஷா ஷீலா மற்றும் யேசுதாசை மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலசெல்வன் முன்பாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இருவரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.