வண்டலூர்: வண்டலூர் திமுக பிரமுகர் வி.எஸ். ஆராமுதன் கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கில் தாமாக முன் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா அல்லது கூலி படையினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆராமுதன் கொலையில் பல்வேறு திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் கூலிப் படையினருக்கு பணம் கொடுத்ததாகவும் போலீஸாரின் சமீபத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதால், நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும் போது, “பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் ஆராமுதனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம். சரணடைந்தவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும். திங்கள் கிழமை குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்” என்றனர்.