மதுரையில் கணவன், மனைவி, 2 மகள்கள் தற்கொலை - போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அனுப்பானடியில் குடும்பத் தகராறில் கணவன், மனைவி, 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

திருமங்கலம் அருகே தொட்டியப் பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (45). பட்டதாரியான இவர் கரூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். மதுரை பேரையூரை சேர்ந்த வீர செல்வியை 2010-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு தனுஸ்ரீ ( 13 ), மேகாஸ்ரீ ( 8 ) ஆகிய மகள்கள் இருந்தனர். இந்நிலையில், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் வீர செல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு அனுப்பானடி பாபுநகர் 4-வது தெரு பகுதியில் செந்தில் குமார், மனைவி, மகள்களுடன் வாடகை வீட்டில் குடியேறினார். இதற்கிடையே, செந்தில் குமார் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து, மனைவியின் பணத்தை எடுத்துச் சென்று மது குடித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து புறப்பட்ட செந்தில் குமார், சிலைமான் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்துக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை சிலைமான் போலீஸார் மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது செந்தில் குமார் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தனக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவதால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து, அவரது மனைவி வீர செல்வியிடம் சிலைமான் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வீரலெட்சுமி, மகள்கள் தனுஸ்ரீ ( 13 ), மேகாஸ்ரீ (8) ஆகியோர் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு வந்த தெப்பக் குளம் போலீஸார், 3 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE