மேடவாக்கம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை: பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

மேடவாக்கம்: சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி; இவரது மகன் பிரவீன் (26). இவர் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மி (24) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஷர்மியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரவீனும் ஷர்மியும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்று மது அருந்தியபோது ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென விடுதிக்குள் நுழைந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த பிரவீனை அருகிலிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பிரவீன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ஷர்மிளாவின் சகோதரர் ஜல்லடையான் பேட்டையை சேர்ந்த தினேஷ் (எ) குட்டி அப்பு(23), சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த விஷ்ணுராஜ் (25), ஸ்டீபன்குமார் (24), பள்ளிகரணையை சேர்ந்த ஜோதிலிங்கம் (25), ஸ்ரீராம் (18), ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் வண்டலூர் அருகே மாம்பாக்கத்தில் கைது செய்தனர்.

பிரவீன்

கொலை செய்யப்பட்ட பிரவீன் மீது 2022-ம் ஆண்டில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரைப் பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரவீன் வேறு சமூகத்தைசேர்ந்தவர். அவர் தங்கள் பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்ததால், அவர் மீதுபெண் வீட்டார் கோபத்துடன்இருந்ததும், இதன் காரணமாக மதுபானக் கூடத்தில் வைத்து பெண்ணின் அண்ணன்தினேஷ் மற்றும் நண்பர்கள் பிரவீனை படுகொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும், “சகோதரியை எங்கள் சம்மதமின்றி திருமணம் செய்ததால் திட்டமிட்டு மதுபானக் கூடத்துக்கு வரவழைத்து வெட்டிக்கொலை செய்தோம்” என ஷர்மிளாவின் சகோதரர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தை கோபி செய்தியாளர்களிடம் கூறும்போது, “சாதி வெறியால் திருமணமான 4 மாதங்களிலேயே எனது மகனைக் கொலை செய்துவிட்டனர். வெளியே சென்ற எனது மகனை அவருடைய மனைவியின் சகோதரர் உட்பட சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்தத்தில் என்ன சாதி உள்ளது?” என்று வேதனை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE