இந்திய தேசிய லோக் தள கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

பஹதூர்கர்: இந்திய தேசிய லோக் தள கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் நஃபே சிங் ரதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பஹதூர்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபய் சௌதாலா உறுதி செய்துள்ளார்.

நஃபே சிங் ரதி, காரில் பயணித்த போது மற்றொரு காரில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அதோடு காரில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நஃபே சிங் ரதி, மீது பல குண்டுகள் பாய்ந்து இருந்ததாகவும், அவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக பிரம்மசக்தி சஞ்சீவனி மருத்துவமனையின் மருத்துவர் மணீஷ் சர்மா தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத நபர்கள் இதை செய்துள்ளதாகவும். அவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகவும். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நஃபே சிங் ரதியின் உயிருக்கு ஆபத்து இருந்தது. அவருக்கு தகுந்த பாதுகாப்பினை மாநில அரசு வழங்கி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிய ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் உள்துறை மற்றும் அனில் விஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்” என அபய் சௌதாலா தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நஃபே சிங் ரதி? - 70 வயதான நஃபே சிங் ரதி, கடந்த 1996 மற்றும் 2000-மாவது ஆண்டு என இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். பஹதூர்கர் முனிசிபல் கவுன்சிலின் தலைவராகவும் இரண்டு முறை பணியாற்றி உள்ளார். ஜாட் சமூக மக்களின் பிரமுகராகவும் அறியப்பட்டவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE