சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அருகே சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த 2 திருநங்கைகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 16 வயது சிறுவனுக்கும், புளியம்பட்டி கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் கார்த்திக் (எ) காயத்ரி, முல்லை ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2022 ஜூலை 14-ம் தேதி காயத்ரி, முல்லை ஆகியோர் பிரியாணி வாங்கித் தருவதாகக் கூறி சிறுவனை அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சிறுவனை வீட்டுக்குள் அடைத்துவைத்து, திருநங்கைகள் இருவரும் கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிய சிறுவன், இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் வெங்கடேஷ்பிரபு மற்றும்போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநங்கைகள் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட திருநங்கைகள் காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE