கரூரில் கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்: போலீஸார் குவிப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: அரவக்குறிச்சி அருகே கொலை செய்யப்பட்ட ராமர்பாண்டி என்பவரின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர் பாண்டி, உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் நடந்து வந்த இவ்வழக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் ராமர்பாண்டி நேற்று ஆஜராகிவிட்டு அவரது உறவினர் கார்த்திக்குடன் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தின் பின் இருக்கையில் ராமர்பாண்டி அமர்ந்து சென்றார். கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே பேரப்பாடி பிரிவில் செல்லும்போது ஜீப்பில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராமர்பாண்டியை வெட்டிக் கொலை செய்தது. கார்த்திக்கையும் தலையில் வெட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரவக்குறிச்சி போலீஸார், கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ராமர்பாண்டி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்தியேன், திருச்சி சரக டிஐஜி மனோகர், எஸ்.பி. பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் மற்றும் ராமர் பாண்டியின் சடலத்தையும் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமர் பாண்டியின் குடும்பத்தினர், உறவினர்கள், அவரது தேவேந்திர குல மக்கள் சபை அமைப்பைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர். இதனால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் வசிக்கும் திருமாநிலையூர், திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்திருந்த ராமர்பாண்டி குடும்பத்தினர், உறவினர்கள், அமைப்பினர் கொலை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (பிப். 20) ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பிரேத பரிசோதனைக்கு அனுமதிப்போம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கரூர் டிஎஸ்பி சரவணன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் எஸ்.பி. பிரபாகர் பின்னர் ராமர்பாண்டி மனைவி, பெற்றோர், உறவினர்கள், அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE