காதல் மனைவியை கொன்ற வழக்கில் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர், 2014-ல் தனது மகள் சீதாவை (28) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், சீதாவுக்கும், சிதம்பரம் விகேபி தெருவை சேர்ந்த சரவணன் (36) என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இந்நிலையில், அதே ஆண்டு சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரவணனின் அக்காள் சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன், மேல்புவனகிரி விஏஓ முன்னிலையில் ஆஜராகி, சீதா கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

சீதா தலித் பெண் என்பதால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் என்று கருதி, சீதாவின் கணவர் சரவணன், அவரது தாய் செல்வி, அக்காள் சகுந்தலா மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து சீதாவை கொலை செய்து, அவரது சடலத்தை எரித்தாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சுமத்தப்பட்ட சரவணன்(36), வெங்கடேசன் (71), செல்வி(61), சகுந்தலா(48) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், சரவணன், வெங்கடேசனுக்கு தலா ரூ.25 ஆயிரம், செல்வி, சகுந்தலாவுக்கு தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தமராஜ் நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE