புலிகள் காப்பகத்தில் கருங்காலி மரம் வெட்டிய 3 பேர் கைது @ வத்திராயிருப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் கருங்காலி மரத்தை சட்டவிரோதமாக வெட்டி, பதுக்கிய மலைவாழ் மக்கள் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வத்திராயிருப்பு மற்றும் வருஷநாடு வனச்சரக பகுதியில் வனத்துறையில் பட்டியலிடப்பட்ட மரமான அரிய வகை கருங்காலி மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ஜெயந்த் நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த முருகன் (44), ராமலிங்கம் (30), சுரேஷ் (30) ஆகியோர் கருங்காலி மரங்களை வெட்டியது தெரிய வந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து வத்திராயிருப்பு வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய ஜெயந்த் நகரில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கருங்காலி கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் முருகன், ராமலிங்கம், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் யாருக்காக இந்த மரங்களை வெட்டினர். இதே போல் அரிய வகை மரங்களை வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அரிய வகை மரங்களை வெட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE