சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் திருட்டு தொடர்பான 22 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீஸார் குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ளோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் கடந்த 4 முதல் 10-ம் தேதி வரையிலான 7 நாட்களில் பதிவான திருட்டு தொடர்பான 19 வழக்குகளில் 2 இளஞ்சிறார்கள் உட்பட 29 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் இருசக்கர வாகன திருட்டு தொடர்பான 3 வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர்.
சென்னை போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.